துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
LPG எரிக்கப்படும் பொழுது வெளியேறும் கரியமில வாயு! - புதிய மாற்றை முன்வைக்கும் இந்திய விஞ்ஞானி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சமைக்கத் தெரியுமா என்ற கேள்வியை எதிர்கொள்ளாத இந்தியர்கள் சிலரே. இந்த கேள்வியை எதிர்கொள்பர்வர்களில் பெண்கள் அதிகம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இன்றைய தலைமுறையில் பலருக்கு சமைப்பது என்றால் நினைவுக்கு வருவது, கேஸ் அடுப்பு. ஆனால், அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் ஒன்று இருக்கிறது.
இந்திய மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்றைக்கும் மரக்கட்டை அல்லது மரக்கரியை பயன்படுத்துகின்றனர் என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். தமிழ் நாட்டை பொறுத்தவரை, மரக்கரி கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது, மற்ற தாவரங்களை வளரவிடுவதில்லை போன்ற எதிர்மறை காரணங்கள் நாம் அறிந்ததே. ஆனால், தமிழ் நாட்டில் அதுவும் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடுவது ஒரு தொழில்.
கருவேல மரங்களை அழித்து மரக்கரியை உருவாக்கி, அதை சமைக்க பயன்படுத்துவது நல்ல காரியம் தானே என்று தோன்றும். மரக்கரியை பயன்படுத்தி சமைக்கும் பெண்களிடம் கேட்டால் தான் அவர்கள் அனுபவிக்கும் துயரம் தெரியும்.
புகைமூட்டத்தால் ஏற்படும் கண் எரிச்சல் அனுதினமும் அனுபவிக்கும் துயரம். அது தவிர, எரிக்கும் பொழுது உருவாகும் துகள்களால் (Particulate Matter) இதய நோய், சுவாசக்கோளாறு மற்றும் நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டு இறப்பவர்கள் அதிகம்.
எனவே அரசாங்கங்கள் LPG பயன்பாட்டை ஊக்கிவித்தது. கேஸ் ஸ்டவ் மற்றும் சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. LPG ஒப்பீட்டளவில் சுத்தமான எரிபொருள். ஆனால், LPG எரிக்கப்படும் பொழுது கரியமில வாயு வெளியேறும். அதோடு நைட்ரஜன் மற்றும் கந்தகத்தின் ஆக்சைடுகள் வெளியேறுகிறது. இதை தவிர்க்க முடியாது. மீத்தேன் எடுப்பதற்கு எதிரான போராட்டம், ஹைட்ரோ கார்போன் எடுப்பதற்கு எதிரான போராட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இரண்டும் ஒன்று தான் என்பது சிலருக்கு வியப்பாக இருக்கும். ஹைடிரோகார்பன்களில் மிக சிறியது மீத்தேன். இதில் ஒரு கார்பன் அணு இருக்கும். ஈத்தேனில் இரண்டு, ப்ரொபேனில் மூன்று மற்றும் பியூட்டேனில் நான்கு கார்பன் அணுக்கள் இருக்கும். கார்பன் அனுவின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கரியமில வாயு அதிகமாக வெளியேறும். அதனால் அமெரிக்காவில் ப்ரொபேன் மட்டும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில், ப்ரொபேன் மற்றும் பியூட்டேன் கலவை பயன்படுத்துகிறார்கள்.
DME இல் கார்பன் அணுக்கள் ஆக்சிஜனுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, எரிக்கும் பொழுது கரியமில வாயு வெளியேறாது. அதே போல நைட்ரஜன் மற்றும் கந்தகத்தின் ஆக்சைடுகளும் வெளியேறாது. மேற்கூறிய காரணங்களால் உடல் உபாதைகள் வர வாய்ப்பில்லை. கரியமில வாயுவே வெளியேறததால் பூமி வெப்பமாவதும் குறையும். இப்போது நமக்கு ஒரு கேள்வி தோன்றும்.


இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர்களை DME க்கு பயன்படுத்த முடியுமா? இப்பொழுது பயன்படுத்தும் LPG உடன் 20% DME கலந்து பயன்படுத்த முடியும்.
100% DME அடைக்கும் சிலிண்டர் மற்றும் அடுப்புக்களை புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக விஞ்ஞானி முனைவர் திருமலைசாமி ராஜா உருவாக்கி இருக்கிறார். அவர் தான் DME மெத்தனாலில் இருந்து தயாரிக்கும் முறையையும் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கியிருக்கிறார். இந்த முறையால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் LPG யை மட்டுமே நம்பி இருக்காமல், நம் நாட்டிலேயே தூய்மையான எரிபொருளை தயாரிக்கலாம். காற்று மாசுபடுவதற்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்று வாகனங்களில் இருந்து வெளி வரும் புகை.




இந்த புகை டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களில் அதிகம். எனவே, காற்று மாசுபாட்டை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களின் எடை அதிகம். இதனால் எலெக்ட்ரிக் வாகன டயர்கள் அதிகமாக தேய்ந்து நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் பரவி மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இது சமீபத்திய கண்டு பிடிப்பு. எனவே, இருக்கிற வாகனங்களில் LPG பயன்படுத்துகிற வாகனங்கள் சிறந்தவையாக இருக்கிறது. அதில் DME பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். CSIR - NCL விஞ்ஞானி முனைவர் திருமலைசாமி ராஜா கண்டுபிடித்த DME கலந்த LPG சிறந்தது என Automotive Research Association of India (ARAI) நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. தூய்மையான எரிபொருள் காரணமாக சமையல் செய்பவர்களுக்கு உடல்நலக்கோளாறில் இருந்து விடுதலை. நாட்டிற்கு வெளி நாட்டை சார்ந்து இருக்கும் நிலையில் இருந்து விடுதலை.
- முனைவர் கிருஷ்ணமூர்த்தி
Dr K Krishnamoorthy
Senior Principal Scientist
CSIR-National Chemical Laboratory

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.