வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? ராஜஸ்தானுடன் இன்று சென்னை மோதல்!
RR vs KKR Captain's Checkmate : போட்டியை வெல்ல ரஹானே செய்த அந்த ஒரு மூவ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே செய்த ஒரு புத்திக்கூர்மைமிக்க நகர்வைப் பற்றிய அலசல் இங்கே.

'கொத்து கொத்தாக விக்கெட்டுகள்!'
ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. கண்டிப்பாக சுமாரான ஸ்கோர்தான். கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18 ஓவர்களிலேயே போட்டியை முடித்துவிட்டது. கொல்கத்தா அணியின் கட்டுக்கோப்பான பௌலிங்தான் அவர்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
குறிப்பாக, மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியின் பௌலர்கள் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டை கொத்தாக அள்ளியிருந்தனர். குறிப்பாக, 8-11 இந்த 4 ஓவர்களிலும் ஓவருக்கு தலா 1 விக்கெட் விழுந்திருந்தது. கொத்தாக விழுந்த இந்த 4 விக்கெட்டுகள்தான் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. விக்கெட்டுகள் கொத்தாக விழுந்த அந்த 4 ஓவர்களையும் வீசியது வருண் சக்கரவர்த்தியும் மொயீன் அலியுமே.

'ரஹானேவின் வின்னிங் மூவ்!'
ரஹானே மொயீன் அலியையும் வருணையும் பவர்ப்ளே முடிந்தவுடன் 7 வது ஓவரிலிருந்து தொடர்ச்சியாக 7 ஓவர்களை வீச வைத்திருந்தார். இந்த நீண்ட ஸ்பெல்தான் ராஜஸ்தான் அணியை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியது. இந்த 7 ஓவர்களில் வருணும் மொயீன் அலியும் இணைந்து 38 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். அதேநேரத்தில் ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா என நால்வரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
ராஜஸ்தானின் பேட்டர்கள் தொடர்ச்சியாக அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தனர். இதனால்தான் விக்கெட்டுகள் விழுந்தாலும் அட்டாக் செய்யவே முயன்றனர். ஆனால், எதுவுமே சரியாக சிக்கவில்லை. ரஹானேவும் வருணும் மொயீன் அலியும் வீசுவதற்கேற்ப சரியாக பவுண்டரி லைன்களில் பீல்டர்களை வைத்திருந்தார்.

'ரஹானேவின் பீல்ட் செட்டப்!'
இதற்கு உதாரணமாக ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை சொல்லலாம். ஜெய்ஸ்வாலை லெக் சைடில் அடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் ப்ளான். அதனால் வட்டத்துக்கு வெளியே 4 பீல்டர்களை லெக் சைடில் அணைகட்டி நிறுத்தியிருந்தார். ஆஃப் சைடில் பேக்வர்ட் பாய்ண்ட் மட்டுமே வைத்திருந்தார். பீல்டுக்கு ஏற்றவாறு ஜெய்ஸ்வாலை ஷாட் ஆட வைக்க வேண்டும் என்பதற்காக மொயீன் அலியும் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசினார். எதிர்பார்த்ததை போலவே ஜெய்ஸ்வால்ப் லெக் சைடில் அடிக்க முயன்று லாங் ஆனில் அவுட்.
'பிட்ச்சின் தன்மை!'
மொயீன் அலி நான்கு ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இத்தனைக்கும் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் சுனில் நரைனால் ஆட முடியாது என்பது தெரியவந்தது. உடனடியாக மொயீன் அலியை நம்பி ரஹானே இறக்கினார். அந்த நம்பிக்கையை மொயீன் அலி காப்பாற்றிவிட்டார்.

'பிட்ச்சின் தன்மையை ராஜஸ்தான் அணி உணரவில்லை. இது 220-230 ரன்களுக்கான பிட்ச் இல்லை. 180 ரன்களுக்கான பிட்ச். அதை உணராமல் அட்டாக்கிங்காக மட்டுமே ஆடி விக்கெட்டை இழந்திருக்கிறார்கள்.' என ராஜஸ்தானின் சறுக்கலை வர்ணனையில் ராபின் உத்தப்பா விமர்சித்திருக்கிறார்.
பிட்ச்சை ராஜஸ்தான் அணி சரியாக கணிக்கவில்லை. ஆனால், ரஹானே சரியாக கணித்திருந்தார். பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. பந்து நின்று வருகிறது என்பதை அறிந்தவுடன்தான் ஸ்பின்னர்களுக்கு தொடர்ந்து 7 ஓவர்களை கொடுத்தார். இந்த ஆட்டத்தின் செக்மேட் மூவ் அதுதான். உங்களைப் பொறுத்தவரை ஆட்டத்தின் செக் மேட் மூவ் எது கமென்ட்டில் பதிவிடுங்கள்