அணியில் இணைந்த ஹார்திக் பாண்டியா; முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை இந்தியன்ஸ்?
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத ஹார்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார்.
18-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியைத் தழுவியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை. கடந்த சீசனில் ஓவர் வீசுவதில் விதிமீறலில் ஈடுபட்டதால், ஹார்திக் பாண்டியா சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானது.
அணியில் மீண்டும் ஹார்திக் பாண்டியா
சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியை ஹார்திக் பாண்டியா வழிநடத்தவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஹார்திக் பாண்டியா அணியில் இல்லாதது மும்பை அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே பெரிய பின்னடைவாக அமைந்தது. அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது மும்பை அணிக்கு பலம் சேர்த்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
முதல் வெற்றி யாருக்கு?
பேட்டிங்குக்கு சாதகமான அகமதாபாத் திடலில் போட்டி நடைபெறுவதால், தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சை பொருத்தவரையில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு பின்னடைவாக உள்ளது. பும்ரா இல்லாததால் டிரண்ட் போல்ட் மற்றும் தீபக் சஹாரின் மீதான பணிச்சுமை அதிகரித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணியும் முதல் வெற்றிக்கான தேடலில் உள்ளது. அந்த அணியில் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ரஷித் கான் போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சிறப்பான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
அகமதாபாத் திடல் பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக உள்ளதால், இன்றையப் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படலாம் என எதிர்பார்ப்படுகிறது. குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்த திடலில் 40 ஓவர்களில் 475 ரன்கள் குவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?
முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து இன்றைப் போட்டியில் விளையாடும் இரு அணிகளில் யார் முதல் வெற்றியைப் பதிவு செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.