அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - சாத்தூரில் சோகம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கீழகோதை நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகிய மூன்று பேர் பலியானார்கள்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

வெடி விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மாரியம்மாள் (55) என்ற பெண்ணை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் வெம்பக்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.