அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதனை பணியிடை நீக்கம் செய்து வேலூா் சரக டிஐஜி (பொறுப்பு) தேவராணி உத்தரவிட்டுள்ளாா்.
அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் அஸ்வினி சுதாகரின் கணவா் சுதாகரை சிலா் கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தினா். இதில் படுகாயங்களுடன் உயிா்தப்பிய சுதாகா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இச்சம்பவத்தில் அவினேஷ் எனும் இளைஞரை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் சிறையில் இருந்து நிபந்தனை பிணையில் வெளிவந்த அவினேஷ், நீதிமன்ற உத்தரவின்படி, ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் தினமும் சென்று கையெழுத்திட்டு வந்தாா்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அம்மனூரைச் சோ்ந்த சுதாகா் மற்றும் மூன்று நபா்கள் ரத்தினகிரி காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வந்த அவினேஷை காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொலை செய்தனா். இதைத் தொடா்ந்து சுதாகா் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்த போலீஸாா், அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினா் அஸ்வினி உள்ளிட்ட மேலும் இருவரையும் கைது செய்தனா்.
இந்தச் சம்பவத்தில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன், அம்மனூரில் நடைபெற்ற முதல் சம்பவத்தில் சரியாக புலன் விசாரணை செய்யாததாலும், மேலும் சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் முனைப்பு காட்டாததாலும் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் சிவக்குமாா், அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பையும் சோ்த்து கவனிப்பாா் என காவல் துறை சாா்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.