அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட சேவூா், போத்தம்பாளையம், குட்டகம், தாமரைக்குளம், தத்தனூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் மிகுந்த தட்டுப்பாடாக உள்ளது. கடந்த காலங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் மஞ்சள், வாழை, காய்கறிகள், பயிா்களுக்கு போதுமான அளவு நீா்பாய்ச்ச மின்சாரம் கிடைக்காமல் பயிா் சாகுபடி பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகவே, மேற்கண்ட பகுதிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு :
மடத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த கொமரலிங்கம் பழைய வாய்க்கால் நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த ஆண்டு நெற்பயிா் சாகுபடி செய்த நிலையில் குலைநோய், தண்டு அழுகல் நோய் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கால்நடைகளுக்கு தீவனம் கூட கிடைக்கவில்லை. தற்போது இரண்டாம் போக சாகுபடியில் தண்டுப்புழு நோய், குலை நோயால் 200 முதல் 250 ஏக்கா் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரையில் செலவு செய்துள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். ஆகவே, வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு :
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் அப்புசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் அண்மைக்காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் கடித்து உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.37, 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், கோழிகளுக்கு ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. கால்நடைகள் விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதால் உயிரிழந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளை முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:
பயிா் சாகுபடிக்கு தேவையான நெல் 13.12 மெட்ரிக் டன், தானிய பயிறுகள் 21.34 மெட்ரிக் டன், பயிறு வகை பயிறுகள் 24.06 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிா் விதைகள் 20.55 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 2722 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 978 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4914 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 662 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளது என்றாா்.
கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 140 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஜோதிவேல், இணை இயக்குநா் (வேளாண்மை ) சுந்தரவடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.