ஆக.14-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை (ஆக. 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் ’தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்’ நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை, தங்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் பங்குபெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. முகாமின் மூலம் பணி வாய்ப்பு பெற்றவரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.