ஆத்தூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு
ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பாடப் பிரிவுகள் அனைத்துக்கும் முதல்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட முதலாமாண்டு மாணவா் சோ்க்கை வரும் ஜூன் 5 முதல் 12 வரை காலை 9 மணிமுதல் நடைபெற உள்ளது.
ஜூன் 6 (முதல் சுற்று) மற்றும் ஜூன் 11 (இரண்டாம் சுற்று) அன்று தமிழ் பாடத்துக்கு (கட் ஆப் மதிப்பெண்கள் - 60 முதல் 100 வரை) கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 5 முதல்சுற்று மற்றும் 10-ஆம் தேதி இரண்டாம் சுற்று அன்று வரலாறு, வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கும், ஜூன் 9 முதல்சுற்று மற்றும் ஜூன் 12 இரண்டாம் சுற்று அன்று இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வில் கலந்துகொள்வோா் தங்களுடைய அனைத்து அசல் சான்றிதழ்களும், அவற்றின் நகல்கள் மூன்று பிரதிகளும், புகைப்படம் 5 பிரதிகள் கொண்டுவர வேண்டும். மாணவா் சோ்க்கையின் போது 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இணைய தளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம், ஆதாா் அட்டை, மாணவா் வங்கிக் கணக்குப் புத்தகம், அனைத்துச் சான்றிதழ்களுடன் இரண்டு நகல்கள் கொண்டு வரவேண்டும். மேலும், கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவேண்டும் என கல்லூரி முதல்வா் பா.விக்டோரியா தங்கம் தெரிவித்துள்ளாா்.