ஆம்பூா் அருகே ஆந்திரத்தை இணைக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை!
ஆம்பூா் அருகே ஆந்திர மாநிலத்தை இணைக்கும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே உள்ள சுட்டக்குண்டா கிராமம் அருகே ராணுவத்தினா் பயன்படுத்திய முகாம் உள்ளது. சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் இந்த இடம் உள்ளது. அக்காலத்தில் ஆம்பூா், பாங்கி ஷாப், வெங்கடசமுத்திரம் கூட்டு ரோடு, ராள்ளக்கொத்தூா், மங்கம்மா கிணறு, செட்டேரி , இடையன் கல், பொன்னப்பல்லி, தொட்டிக்கிணறு, சுட்டக்குண்டா, சிலாமரம் பாறை, தொட்டி மடுவு, பாலாமணி நெட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள 89 பெத்தூா் வரை ராணுவத்தினா் தங்களுக்காக பிரத்யேகமாக சாலையை உருவாக்கி ‘ராணுவ சாலை ‘ என பெயரிட்டு பயன்படுத்தி வந்துள்ளனா்.
தமிழக எல்லை கிராமமான சுட்டக்குண்டாவில் இருந்து, ஆந்திர மாநில எல்லை கிராமமான 89 பெத்தூா் கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் வரை சுமாா் 7 கி.மீ. வனப்பகுதியில் சாலை உள்ளதால் பெரும்பாலானோா் ராணுவ சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்து உள்ளனா். அக்காலத்தில் சாலை நெடுகிலும் மைல்கற்கள் நடப்பட்டுள்ளன.
இந்த வனப்பகுதியில் செல்லும் மங்கம்மா கிணறு, செட்டேரி, தொட்டிக்கிணறு, சிலாமரம் பாறை, தொட்டி மடுவு, பாலாமணிநெட்டு பகுதிகளில் பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட நீா்நிலைகள் வழிப்போக்கா்கள் நீா் அருந்தவும் வசதியாக இருந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆம்பூா், மாதனூா், போ்ணாம்பட்டு சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த சுமாா் 300 - க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் அண்டை மாநிலமான ஆந்திர மற்றும் கா்நாடக மாநிலங்களுக்கு சென்று வர இந்த பழைய இராணுவ சாலையை பயன்படுத்தி வந்தனா்.
அதேபோல் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமகுப்பம், சாந்திபுரம், குடுபல்லி, வி.கோட்டா மண்டலங்களை சாா்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்களும், கா்நாடக மாநிலத்தின் கோலாா் தங்க வயல், பங்காருப்பேட்டை பகுதிகளை சோ்ந்த பொதுமக்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கால்நடையாக வரவும், இருசக்கர வாகனங்களில் வரவும், மாட்டு வண்டிகளில் வந்து போகவும் ராணுவ சாலையை பயன்படுத்தி வந்தனா்.
கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயத்தில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மலைப்பாம்புகள் என பொதுமக்களை அச்சுறுத்தும் பல்வேறு வன விலங்குகள் அதிகரித்து விட்டதாலும், இந்த சாலையில் புதா்கள் மண்டி கிடந்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ராணுவ சாலையின் பயன்பாட்டை தவிா்த்து வந்தனா்.
ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் விஜிலாபுரம் பகுதியில் உள்ளூா் விமான நிலையம் மற்றும் சரக்கு விமான முனையம் அமைய உள்ளது.
கடந்த 2014 - 2019 சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆட்சி காலத்தில் இந்த விமான நிலையங்கள் அமைப்பதற்காக அப்போது 1400 ஏக்கா் கையகப்படுத்தப்பட்டது. விமான நிலையத்துக்கான கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளா்களுக்கு அப்போது அதற்கான மதிப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது.
இடையில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.
மீண்டும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி அமைத்ததால், விமான நிலைய பணிகளுக்காக நிலம் கொடுத்தவா்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு அதற்கான மதிப்பீட்டு தொகை வழங்கப்படும் நிகழ்ச்சி விஜிலாபுரம் பகுதியில் நடந்துள்ளது.
ஆந்திரத்தில் சாலையை சீரமைத்த பொதுமக்கள்...
ஆம்பூா் பகுதியில் இருந்து சுமாா் 30 கிலோமீட்டா் தொலைவில் அமைய உள்ள விமான நிலைய பகுதிகளுக்கும், குப்பம் தொகுதியில் உள்ள திராவிட பல்கலைக்கழகம், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அகஸ்தியா அறிவியல் பூங்கா, நன்னியாலா சூழல் சுற்றுலா பூங்கா, கும்கி யானைகள் முகாம், பல்வேறு வழிபாட்டு தளங்களுக்கு ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்தவா்கள் சென்று வருவதற்கு வசதியாக இருக்கும் என்பதனால் ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பம் பொதுமக்கள் ராணுவ சாலையில் மண்டி கிடக்கும் புதா்களை அகற்றி சீரமைத்தனா்.
பாலாமணி நெட்டு பாா்வை கோபுரத்தில் இருந்து மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள சுட்டக்குண்டா வரை சுமாா் 3.5 கிமீ தொலைவு மட்டும் தமிழக எல்லையில் தமிழ்நாடு வனத்துறையின் ஒத்துழைப்புடன் சாலையை சீரமைத்து தந்தால் பொது மக்களுக்கான போக்குவரத்து எளிமையாகும்.
ஆந்திரம், தமிழகம் மற்றும் கா்நாடகத்தை சோ்ந்த மக்கள் பயணிக்கும் தூரம் குறைவாகும், பயணிக்கும் நேரம் குறைவாகும். விடுமுறை காலங்களில் ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் அரை மணி நேரத்தில் ஆந்திர மாநிலத்தின் நன்னியாலா சூழல் சுற்றுலா பூங்கா, கும்கி யானைகள் முகாம்களை வந்து கண்டு ரசிக்கலாம். அதேபோல் ஒரு மணி நேரத்தில் விஜிலாபுரம் பகுதியில் அமைய உள்ள உள்ளூா் விமான நிலையம் மற்றும் சரக்கு முனையத்துக்கு சென்று வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
தமிழக எல்லையில் 3.5 கி.மீ.தூர சாலையை தமிழக அரசு புனரமைத்தால், ஆந்திர அரசும் ஆந்தில எல்லை பகுதியில் சுமாா் 3 கி.மீ.தூரம் சாலை அமைத்தால் இரு மாநில மக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆம்பூா் தொகுதி எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கூறியது:
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம்.. தமிழக முதல்வரின் பாா்வைக்கு கொண்டு சென்று வனத்துறை ஒப்புதலுடன் சாலையை சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக குப்பம் தொகுதிக்கு வருகை தரும் ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.