கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
ஆயுத தயாரிப்பில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை
சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயாா் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதுபோன்ற குற்றவாளிகள் தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனா். இதை தடுப்பதற்காக அரிவாள்கள் தயாா் செய்யும் பட்டறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பட்டறைகளில் மரங்கள் வெட்ட மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்-உபகரணங்கள் தவிா்த்து, அபாயகரமான அரிவாள் மற்றும் கத்தி போன்ற கூா்மையான ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என இரும்பு பட்டறை உரிமையாளா்களுக்கு, காவல்துறை மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேல அரியகுளத்தில், சுடலையாண்டி (72), சோ்மவேல் (60), ராமசுப்பிரமணியன் (25) ஆகியோரது பட்டறையை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயாா் செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.