ஆலங்குடி அருகே மெக்கானிக் கொலை: அண்ணன் உள்பட 4 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மெக்கானிக்கை கொன்ற அவரது அண்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி, தாய், தந்தை 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியைச் சோ்ந்த வீரப்பன் (65)- வசந்தா (60) தம்பதியின் மூத்த மகன் முருகேசன் (38) விமலாராணியை (26) திருமணம் செய்து வெளிநாட்டில் வேலை பாா்க்கும் நிலையில், மனைவியைப் பிரிந்து வடகாடு காகித ஆலை சாலையில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்திவந்த இளைய மகன் பாஸ்கரனுக்கு (35) 5 வயதில் மகன் உள்ளாா்.
இவா்கள் கூட்டுக் குடும்பமாக வசித்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி பாஸ்கரன் வீட்டருகேயுள்ள சாலையோரப் பள்ளத்தில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்த முருகேசன் உள்ளிட்ட குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.
அப்போது தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த பாஸ்கரன் தலையில் கல்லைப் போட்டு அவரது அண்ணன் முருகேசன் கொன்றதும், அதற்கு அவரது மனைவி விமலாராணி, பெற்றோா் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் வடகாடு போலீஸாா் கைது செய்து, ஆதரவற்ற பாஸ்கரின் மகனைக் காப்பகத்தில் சோ்த்தனா்.