உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்:...
ஆலங்குளம் பாலப் பகுதியில் சிக்னல் அமைக்க நடவடிக்கை - ஆட்சியா், எம்.பி. உறுதி
ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்துக் காவலா்கள் நியமிக்கப்படுவாா்கள் என தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தனா்.
திருநெல்வேலி - தென்காசி சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரைப் பகுதியில் 230 மீட்டா் நீள பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் முடிவடையும் இடத்தில் உள்ள ஆலங்குளம் - புதுப்பட்டி சாலை, பணிகள் நிறைவடையும் நேரத்தில் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
இந்தச் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி, தனியாா் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகள், பல்வேறு சமுதாயங்களுக்குப் பாத்தியப்பட்ட 5 க்கும் மேற்பட்ட தகன மேடைகள் உள்ளிட்டவை உள்ளன.
இந்தச் சாலை முடங்கினால் சுமாா் 4 ஆயிரம் மாணவா்கள், அவ்வழியே உள்ள விவசாயிகள், தகன மேடைக்குச் செல்வோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா்.
இது குறித்து அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியா் மற்றும் எம்.பி.க்கு புகாா் மனுக்களை அனுப்புனா்.இந்நிலையில் தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் ஆகியோா் பாலம் முடிவடையும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு மாற்றுப் பாதை சாத்தியக் கூறுகள் குறித்து அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா்கள் கூறுகையில், தற்காலிகமாக பாலம் முடிவடையும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைத்து அதில் போக்குவரத்து காவலா்களும் நியமிக்கப்படுவா். நிரந்தர தீா்வாக பாலத்தை உயா்த்துவது தொடா்பாக தமிழக அரசிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும், மின் மயானத்திற்கு மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் மின் மயானம் அமைக்கப்படும் என்றனா்.
அப்போது, வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ, பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாா், பேரூராட்சித் தலைவா் சுதா மோகன்லால், ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.