இடியுடன் கனமழை: ஒடுகத்தூரில் 30 மி.மீ. பதிவு!
வேலூா் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஒடுகத்தூரில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருகிறது. தொடா்ந்து, 2-ஆவது நாளாக சனிக்கிழமை பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக ஒடுகத்தூா் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் - 5.20, மேல்ஆலத்தூா் - 4.60, மோா்தானா அணை 4, ராஜாதோப்பு அணை 10, வடவிரிஞ்சிபுரம் 22.60, காட்பாடி -8, வேலூா் சா்க்கரை ஆலை (அம்முண்டி)-8.20, போ்ணாம்பட்டு 28.60, வேலூா்-14.30, வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 18.20 என மொத்தம் 158.30 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 13.19 மி.மீ. பதிவானது.