இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?
இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்து புஜாரா பேசியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வாகவில்லை. அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார்.
இதையும் படிக்க: முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கான அணியில் புஜாரா இடம்பெறவில்லை.
மீண்டும் வாய்ப்பு கிடைத்தால்...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். இந்திய அணிக்காக விளையாடுவதை நான் விரும்புகிறேன். அதே நேரத்தில், அணியில் இடம்பெறுவோமா? மாட்டோமா? என அதிகம் யோசிக்கவும் மாட்டேன். நிகழ்காலத்தில் இருப்பதையே நான் விரும்புகிறேன்.
இதுவரை இந்திய அணிக்காக விளையாடிய எனது கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது. என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்தில் எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. கிரிக்கெட்டை நான் மிகவும் நேசித்து விளையாடுகிறேன். மகிழ்ச்சியாக என்னால் எவ்வளவு காலம் விளையாட முடிகிறதோ அதுவரை விளையாடுவேன். நான் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறேன். என்னுடைய உடல்தகுதியிலும் கவனமாக இருக்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்த மற்றொரு வாய்ப்பு!
இந்திய அணிக்காக இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 7195 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 43.60 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.