இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரும் நேபாளம்!
இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 21) வரை பயணம் மேற்கொண்ட நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்சூ ரானா டியூபா இந்தியா வழங்கும் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக 12 நாள் பயணமாக இந்தியா வந்த அமைச்சர் டியூபா புது தில்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்றார். அந்த மாநாட்டில் அவர் மால்டோவா துணைப் பிரதமர் மற்றும் பிலிப்பைன்ஸ், ஜியார்ஜியா உக்ரைன் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.
இதையும் படிக்க: பாலியல் குற்றவாளிகளுக்கு சாதகமாக அலாகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு: மத்திய அமைச்சர் கண்டனம்!
இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு கூட்டங்களின் போது ஏற்பட்ட முன்னேற்றங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதுகுறித்து, அமைச்சர் டியூபா தனது எக்ஸ் சமூகவளைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த பயணத்தில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ள இரு நாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியாவால் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேபாளத்தின் மின்சாரத் தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருப்பதினால் அந்நாட்டில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறையை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.