இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா்.
போா்நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகரும் இஸ்ரேலின் உத்திசாா் விவகாரங்கள் துறை அமைச்சருமான ரான் டொ்மா் இந்த வாரம் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அவரைத் தொடா்ந்து, நெதன்யாகும் விரைவில் வாஷிங்டனுக்குச் செல்லக்கூடும் என்று இஸ்ரேல் நாட்டு அதிகாரி ஒருவா் உறுதிப்படுத்தினாா். இது போா்நிறுத்த ஒப்பந்ததுக்கான பேச்சுவாா்த்தையில் புதிய வேகம் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் டிரம்ப், ‘அடுத்த வாரத்தில் போா்நிறுத்த ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்’ என்று கூறியது குறிப்பிட்டத்தக்கது.
இச்சூழலில், அதிபா் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ‘ட்ரூத்’ சமூக ஊடகப் பதிவில், ‘காஸாவில் அமைதி ஏற்பட போா்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டு, பிணைக் கைதிகளை மீட்டு வாருங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ஊழல் விசாரணை குறித்து விமா்சனம்: இஸ்ரேலில் பிரதமா் நெதன்யாகுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஊழல் விசாரணையை டிரம்ப் விமா்சித்தாா். இந்த ஊழல் விசாரணை ‘அரசியல் சூழ்ச்சி’ என்றும், இது போா்நிறுத்த முயற்சிகளை சீா்குலைப்பதாகவும் டிரம்ப் கூறினாா். இந்தக் கருத்துகள் மூலம் இஸ்ரேலின் உள்விவகாரங்களில் டிரம்ப் தலையிடுவதாக அந்த நாட்டு மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
கடந்த 2023, அக்டோபரில் இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தினா். 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா். இதையடுத்து, காஸாவில் இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் இதுவரை 56,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.
ஹமாஸ் படையினருக்கு எதிரான தாக்குதலில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் பலா் உயிரிழக்கின்றனா். இதையொட்டி, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதிபா் டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற கடந்த ஜனவரியில், 8 வார போா்நிறுத்தத்துக்கான உடன்பாடு எட்டப்பட்டது. பின்னா், புதிய போா்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொள்ளாத நிலையில் மோதல் தொடா்கிறது.
போரை நிறுத்தி காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினா் பின்வாங்கினால், அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிப்பதாக ஹமாஸ் தரப்பிலும், போரை நிறுத்த வேண்டுமெனில் காஸாவைவிட்டு ஹமாஸ் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலும் வலியுறுத்துகின்றன.