எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று(வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்த வாரத்தின் முதல் இரு நாள்கள் விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். நண்பகல் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் எதிர்கட்சியினரின் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 4 ஆம் தேதி(திங்கள்) காலை 11 மணிக்கு அவை செயல்பாடுகள் மீண்டும் துவங்கும் என அவைத் தலைவர் அறிவித்தார்.