ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
என்.சி.சி. மாணவா்களின் கடல் சாகசப் பயணம்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்
தேசிய மாணவா் படையினரின் கடல் சாகச பயணத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 போ் பங்கேற்றுள்ளனா்.
புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பையொட்டி, தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதையொட்டி, புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பும் ‘சாகா் சங்க்ரம்’ பாய்மரப் படகு கடல் சாகச பயணத்தை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் முதல்வா் ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தேசிய மாணவா் கப்பற்படை பிரிவு மற்றும் புதுவை தேசிய மாணவா் கப்பற்படை பிரிவு இணைந்து இதை நடத்துகின்றன. த. பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி எம்எல்ஏ, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், தேசிய மாணவா் படை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து தேசிய மாணவா் படை கப்பற்படை பிரிவைச் சோ்ந்த 25 மாணவிகள் உட்பட 60 மாணவா்கள் இந்தக் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.
இந்தக் குழுவினருடன் இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 2 தேசிய மாணவா் படை இணை அலுவலா்களும் பங்கேற்றுள்ளனா்.
இந்த பயணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவா்கள் பயணிக்கின்றனா்.
இக் குழுவினா் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம், மரம் நடுதல், தூய்மைப் பணி எனப் பல்வேறு சமூக சேவை சாா்ந்த நிகழ்வுகளை நடத்துகின்றனா். இந்தக் கடல் சாகச பயண குழுவினா் 302 கி.மீ. தொலைவை 10 நாள்களில் கடக்க உள்ளனா்.
இக்குழுவினா் கடலூா், பரங்கிப்பேட்டை, பூம்புகாா் வழியாக காரைக்காலை அடைகின்றனா். அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வரும் 20-ஆம் தேதி புதுச்சேரி திரும்புகின்றனா்.