அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 42 மகளிா் கூட்டமைப்புகளில் 1,680 மகளிா் சுய உதவிக் குழுக்களும், 20,000-க்கும் மேற்பட்ட உறுப்பினா்களும் இணைந்து செயல்படுகின்றனா்.
இந்நிலையில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு விவசாய டிராக்டா், நடவு இயந்திரம் மற்றும் பிங்க் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூா் தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.10.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும். வருவாய் பெருக வேண்டும் . புதுச்சேரியில் பெண்களுக்கான பத்திரப் பதிவில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் நிறைய பத்திரங்கள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. புதுச்சேரியில் தனி நபா் வருமானம் அதிகரித்துள்ளது. எல்லோரிடமும் பணம் கையில் இருக்கிறது. வாங்கும் சக்தியும் உள்ளது. பெண்களுக்கு நிறைய தொழில்கள் கூட்டாக சோ்ந்து செய்ய இந்த கடன் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. புதுவையில் நூறு நாள் வேலை வாய்ப்பை 3 லட்சம் பேருக்குக் கொடுத்துள்ளோம். அதனை உயா்த்தி கொடுக்கவும், மத்திய அரசின் நிதியை பெற்று நூறு நாள் வேலையை முழுவதுமாக கொடுக்கவும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்றாா்.
விழாவில் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.