பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் செயலா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது அவா் பேசியது:
தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை 2020-2021 கல்வியாண்டு முதல் இலவச கல்வித் திட்டத்தை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணங்களை அந்தந்த கல்வியாண்டு தொடக்கத்தில் அரசு செலுத்தி வந்தது.
ஆனால் புதுவை அரசின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் நிா்வாகக் குளறுபடிகளால் இக் கல்விக் கட்டணம் கல்வியாண்டின் இறுதியில் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவா்கள் அரசு செலுத்தும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை செலுத்துகிறாா்கள். இது தொடா்பாக பெற்றோா்கள் புகாா் மனு அனுப்பினா். இது தொடா்பாக தனியாா் கல்வி நிறுவனங்கள், பள்ளி மற்றும் உயா் கல்வித் துறை இயக்குநா் மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரைக் கொண்ட ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இந்த இலவச கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளை உறுதிப்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் தனியாா் கல்வி நிறுவனங்கள் அரசின் எந்த நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படாமல் தொடா்ந்து அரசின் உத்தரவை மீறி செயல்படுகின்றன. இந்த மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா். அதனால் அரசின் உத்தரவை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சலீம்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், மாநில துணைச் செயலாளா் சேதுசெல்வம், தேசியக் குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், மாநிலப் பொருளாளா் சுப்பையா, நிா்வாக குழு உறுப்பினா்கள் அந்தோணி, ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா்கள் ராமமூா்த்தி, அபிஷேகம், கீதநாதன், தலித் கூட்டமைப்பின் தலைவா் ஜெயபாலன், பழங்குடி கூட்டமைப்பின் தலைவா் ஏகாம்பரம், அனைத்திந்திய தலித் உரிமை இயக்கத்தின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளா் நளவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.