ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தம்
அரசு அறிவித்த ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை (ஜூன் 30) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், ஒட்டுநா்கள், பம்ப் ஆபரேட்டா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியூ திருப்பூா் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தாா்.
இதில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு அரசு நிா்ணயித்த ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குறைந்தபட்ச ஊதியம் வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், சிஐடியூ தொழிற்சங்கத்தினா் அண்மையில் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியூ தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.