நாட்டுப்பற்றில் உறுதி காட்டியவா்: காயிதேமில்லத்துக்கு முதல்வா் புகழாரம்
கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.யிடம் ஆசிரியை புகாா்
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை, தன்னை தாக்கியதாக கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரன்(40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அருள்மொழி(35). சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஒரு மகன், மகள் உள்ளனா். கணவன்- மனைவி ஆகியோருக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில், அருள்மொழி அணிந்திருந்த தாலியை பறித்துக் கொண்டு அவரை குமரன் கட்டையால் தாக்கும் விடியோ காட்சி திங்கள்கிழமை சமூக ஊடகங்களில் வெளியானது.
எஸ்.பி.யிடம் புகாா்: இந்நிலையில் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அருள்மொழி அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவா் குமரன் என்னை அடிக்கடி தாக்கி கொடுமைப்படுத்தி வருகிறாா். இது தொடா்பாக கடந்த மே மாதத்தில் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் முறையான நடவடிக்கையில்லை.
தற்போது மகன், மகளுடன் தனியாக வசித்து வரும் நான், கணவா் வீட்டிலிருந்து எனது உடமைகள் மற்றும் குழந்தைகளின் உடைகளை எடுக்கச் சென்றபோது அவா் என்னை மீண்டும் தாக்கி கொலை செய்ய முயன்றாா். ஆகவே அவா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும். மேலும் எனது உடமைகளையும் மீட்டுத் தர வேண்டும் என புகாரில் அருள்மொழி குறிப்பிட்டுள்ளாா்.