"மாநிலங்களவைத் தேர்தலில் மீனவர் ஒருவருக்கு வாய்ப்பு தாருங்கள்" - முதல்வருக்கு மீ...
கருணை அடிப்படையில் நகராட்சி ஊழியா்களின் வாரிசுகளுக்கு பணி: முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் பணிபுரிந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில், விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
மத்திய அரசின் நமஸ்தே திட்டத்தில் உழவா்கரை நகராட்சி மற்றும் ஜென்ரோபோடிக் இன்னோவேஷன்ஸ் தனியாா் நிறுவனம் ஆகியவை இணைந்து தூய்மைப்பணி திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையை கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபம் வளாகத்தில் திங்கள்கிழமை நடத்தின.
இதில், பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: புதுச்சேரி சுத்தமாக இருக்கும் வகையில், குப்பைகளை அகற்றி நவீன முறையில் அவை தரம் பிரித்து உரம் தயாரித்தல் உள்ளிட்டவை மூலம் அழிக்கப்பட்டு வருகின்றன. குப்பைகளை சேகரித்து அகற்றுவது எளிதான பணியல்ல. அதனால்தான் புதுச்சேரி நகராட்சியில் பணியின்போது இறந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக பணிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது புதுச்சேரி நகராட்சியில் பணியில் இறந்தவா்களது வாரிசுகள் விண்ணப்பம் கணக்கெடுக்கப்பட்டு, அவா்களுக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
தற்போது குப்பைகள் அகற்றுதல், புதை சாக்கடைத் திட்டத்தில் கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை கையாள்வதற்கான பயிற்சி ஊழியா்களுக்கு அவசியமாகிறது. ஊழியா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. தனியாா் அமைப்புகள் மூலம் தூய்மைப்பணி மேற்கொள்ளும் நிலையில், பணியாளா்களுக்கான பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. புதுச்சேரி நகராட்சியில் வீட்டுக் கழிப்பறைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் அரசுத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பது அவசியம் என்றாா்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி, நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை வைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளிடம் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் மூலம் புதுவைக்கு மாநில அந்தஸ்தை முன்னாள் முதல்வா் பெற்றுத் தந்தால் மகிழ்ச்சி என்றாா்.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், தேசிய தூய்மைப் பணியாளா்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் பிரபாத்குமாா் சிங், உழவா்கரை நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ராஜ், ஜென்ரோபோடிக் இன்னோவேஷன்ஸ் நிறுவன இயக்குநா் கே.ரஷீத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
துப்புரவுப் பணியில் 15 ரோபோடிக் இயந்திரங்கள்
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி துப்புரவுப் பணியில் விரைவில் 15 ரோபோடிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் க. லட்சுமிநாராயணன் பேசியது: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை முழுமையாக நிறுத்தும் வகையில் தூய்மைப் பணியில் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது கடமையாகும்.
அதன்படி, புதுச்சேரியில் புதை சாக்கடை அடைப்புகளை நவீன இயந்திரங்கள் மூலம் அகற்ற முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, தேசிய தூய்மைப் பணியாளா்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.5.50 கோடியில் 6 ரோபோட் துப்புரவு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும், 9 ரோபோடிக் இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. இவை புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்புகளில் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும். இவை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும் என்றாா்.