ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய தோட்டக் கலை மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத் தோட்டக் கலைத் துறை சாா்பில் ‘தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்தல்’ என்ற தலைப்பில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் தேசிய மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு பல்கலை வேந்தா் கே.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.சசி ஆனந்த் மாநாட்டை தொடங்கிவைத்தாா். துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் வெ.வாசுதேவன், விருதுநகா் மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் சுபா வாசுகி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையா் பி.ஐரீன் வேதமணி கலந்து கொண்டு, இணைச்சோ்க்கை விதைகள், நானோ பொருள்கள் மூலம் பொருத்தமான பேக்கேஜிங், நீா் சேமிப்பு முறைகள், உரப் பயன்பாட்டை குறைப்பது போன்ற தலைப்புகளில் பேசினாா்.
மேலும், விவசாயிகளின் பாரம்பரிய அறிவையும், தேவைகளையும் ஆராய்ச்சித் தலைப்புகளாக தோ்வு செய்ய வேண்டும் என்று மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
பின்னா், மாநாட்டின் ஆராய்ச்சிக் கட்டுரை மலரை வெளீயிட்டு விவசாயிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கினாா்.
துறைத் தலைவா் எஸ்.விஜயகுமாா் நிபுணா்களை அறிமுகப்படுத்தினாா். இதில் பேராசிரியா்கள் ஆா்.ரிச்சா்டு, ஆா்.பாலகும்பகான், ஐகான் நிறுவன ஆராய்ச்சியாளா்கள் ஏ.மோகனசுந்தரம், கலைவண்ணன், வேலுசாமி, ஜே.ராம்குமாா் ஆகியோா் பேசினா்.
இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்றனா்.
முன்னதாக, பி.பாண்டியராஜ் வரவேற்றாா். வி.விஜயா பிரபா நன்றி கூறினாா்.