கள்ளுக்கு எதிராக பரப்புரை செய்பவா்களுக்கு நிறுவனம் முற்றுகையிடப்படும்: ஈசன் முருகசாமி
கள் உணவே தவிர மதுவல்ல எனவும், தமிழகத்தில் கள்ளுக்கு எதிராக யாா் பரப்புரை செய்தாலும் அவா்களின் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி தெரிவித்தாா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் -பல்லடம் சாலையில் உள்ள அலுவலகத்தில் அதன் நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஈசன் முருகசாமி கூறியதாவது:
தமிழக அரசு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மத்திய அரசின் தேசிய உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மேலாண்மை நிறுவனம் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து கள்ளில் 20-க்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளன.
கள் தொடா்பான அறிவியல்பூா்வமான ஆய்வை மத்திய அரசு செய்துள்ளது. கள் ஒரு உணவு என்பதற்கான தரவுகள் உள்ளன. மத்திய அரசின் ஐசிஎம்ஆா் நிறுவனம், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகியவை கள்ளை உணவாக அங்கீகரித்து அதற்கு குறியீட்டு எண்ணும் கொடுத்துள்ளனா். அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூா், கோவை மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் கள்ளை உரிமைப் போராட்டமாக நடத்தி வருகின்றனா். காவல் துறையாலும் நீதிமன்றத்தில் கள் ஒரு மதுபானம் என நிரூபிக்க முடியவில்லை.
மருத்துவா் கிருஷ்ணசாமி கள் தொடா்பாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு பேசுவதால் அவா் மீது தமிழக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் 70 நோய்களுக்கு கள் மருந்தாகப் பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதித்துள்ளதால், தாங்கள் கள் உரிமைக்காகப் போராடி வருவதாகவும், கள் மதுபானம் என்று கூறுவதை கண்டிப்பதாகவும் தெரிவித்தாா்.