கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சென்னை: கவரைப்பேட்டையில் பாக்மதி ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம் என விசாணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு அக்.11-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் மைசூர்-தர்பங்கா பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன, பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்து, 20 பேர் படுகாயமடைந்தனர், உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டதையடுத்து ரயில் விபத்துக்குக் காரணம் சதிச்செயலா என தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
மேலும், விபத்து குறித்து கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.
இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தீவிரவாத சதி உள்ளதா என்ற கோணத்தில் என்ஐஏ தனியாக ஆரம்பநிலை விசாரணையை நடத்தியது.
தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் கழன்று விழுந்ததே விபத்துக்குக் காரணம் என கூறப்பட்டாலும், அது எப்படி நடந்தது, அதைச் செய்தது யாா் அல்லது தற்செயலாக நடந்ததா என்ற கோணத்தில் மாநில காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.
இத்தகைய சம்பவங்கள் கவரைப்பேட்டை மட்டுமின்றி மேலும் சில இடங்களில் சமீபத்திய மாதங்களில் நடந்துள்ளன. அனைத்தையும் விசாரித்த என்ஐஏ குழு, அவை ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவையா என்ற கோணத்தில் புலனாய்வு மேற்கொண்டது.
இருப்பினும், இவற்றில் தீவிரவாத சதிச் செயலுக்கான முகாந்திரம் இல்லை என்பதை கண்டறிந்துள்ளோம். பிரச்னையின் தீவிரம் கருதி மாநில காவல்துறையின் விசாரணைக்கு தேவைப்படும் உதவிகளை என்ஐஏ செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலை
இந்நிலையில், கவரைப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலையே காரணம் என்று விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தண்டவாளத்தில் உள்ள நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதால் ஏற்பட்ட நாசவேலையே விபத்துக்கு காரணமாக விசாரணையில் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து 'நாசவேலை' பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி கூறியுள்ளார்.
ரயில் ஓட்டுநர் செயல் பாராட்டத்தக்கது
மேலும், பாக்மதி விரைவு ரயிலின் ஓட்டுநர் அசாதாரண மன உறுதியையும் சௌத்ரி பாராட்டினார்.
சென்னை பிரிவைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் ஜி. சுப்ரமணி, விபத்து நிகழப்போவதை அறிந்து அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்துவதில் சிறந்த விழிப்புணர்வுடனும் உடனடித்தன்மையுடன் செயல்பட்டதன் விளைவால் ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தியதால் மோதலின் தாக்கம் குறைத்தது. இதில் அவரது பாராட்டத்தக்க நடவடிக்கையை ரயில்வே அங்கீகரிக்கலாம் என்றும் கூறினார்.
அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு பரிந்துரை
பாக்மதி விரைவு ரயிலின் ஓட்டுநர் ஜி. சுப்ரமணிக்கு அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உளவுப் பிரிவை உருவாக்க வேண்டும்
நாசவேலைக்கு ஆளாகக்கூடிய பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, அச்சுறுத்தலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ரோந்துப் பணியை உறுதி செய்யுமாறும், ரயில்வேயின் உளவுத்துறை பிரிவை உருவாக்க வேண்டும். ஃபிட்டிங்ஸ் மற்றும் இணைப்புகளுக்கு திருட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொள்ள வேண்டும்.
மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, ரயில்வே பாதுகாப்புப் படையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, நாசவேலைகளைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மண்டல ரயில்வே முழுவதும் உள்ள எஸ்ஐபி பிரிவுகள், ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய பணியாளர்கள் குறித்த உளவுத்துறை சேகரிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கூடுதல் பிரிவு ரயில்வே மேலாளர்கள் தலைமையில் நாசவேலைக்கு ஆளாகக்கூடிய பகுதிகளில் தண்டவாளங்களில் ரோந்துப் பணி தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் நிலைக்குழுவின் வழக்கமான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து ரயில்வே மண்டலங்களும் நாசவேலைக்கு ஆளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், ஜிஆர்பி, உள்ளூர் காவல்துறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு, உளவுத்துறை சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்து ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகத்துக்குரிய பிரிவுகளில் சிறப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் அச்சுறுத்தல் நிலைகளின் அடிப்படையில் ரோந்துப் பணியை உறுதி செய்ய அனைத்து பிரிவுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விபத்து குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.