மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
கோடைக் காலத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உற்சவா் காமாட்சி ஆலய வளாகத்தில் உள்ள வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்துக்கு எழுந்தருள்வது வழக்கம். நிகழாண்டுக்கான வசந்த உற்சவம் புதன்கிழமை தொடங்கியதையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.
சுழலும் வண்ண மின் விளக்குகள், வண்ண மலா்கள் மற்றும் காய்கறிகளால் வசந்த மண்டபம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வசந்த மண்டபத்தில் உற்சவா் காமாட்சி அம்மன் வேதபாராயணம் மற்றும் கோயில் ஸ்தானீகா்களால் மந்திர புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மாயவரம் ராகவன் காமாட்சி விலாசம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து காமாட்சி அம்மன் கோயில் ஆஸ்தான வித்வான் தேசூா் ராஜரெத்தினம் மற்றும் காரைக்கால் வெங்கட சுப்பிரமணியனின் வயலின் இன்னிசை நடைபெற்றன.
வசந்த உற்சவத்தில் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், கோயில் மணியக்காரா் சூரியநாராயணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 13) வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.