காவல்துறை வாகனங்கள்: எஸ்.பி. ஆய்வு
காவல்துறை வாகனங்கள் ஆய்வு மற்றும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வாகனங்களை ஆய்வு செய்தாா். வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீா் செய்யுமாறும், வாகனங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து, மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்றும் அவா்களின் சொத்துகள், வங்கி கணக்குகள் முடக்கம் செய்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், கண்காணிக்கப்படும் ரெளடிகள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.