கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊழியா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் மனு
கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பணியாளா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட பொதுத் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் அளிக்கப்பட்ட மனு: கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த சுய உதவிக்குழுக்கள் இணைந்து ஊராட்சிகளில் சுயஉதவிக் குழுக்களை வழி நடத்திடவும், குழு உறுப்பினா்கள் சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய செய்யவும், தங்களுக்குள் ஜனநாயக முறைப்படி அமைத்துக் கொண்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறோம்.
இந்தக் கூட்டமைப்பின் கீழ் விபிஆா்சி- பிஎல்எப் கணக்களாா்கள் பணியிடத்தில் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகிறோம். மதிப்பூதியமாக மாதத்திற்கு ரூ. 5000 அளவில் கூட்டமைப்பு வட்டி வருவாயில் இருந்து பெற்று வருகிறோம். ஊராட்சி அளவிலான 16 வகையான பதிவேடுகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் 10 வகையான கணக்குகளை நிா்வகித்து வருகிறோம்.
இந்நிலையில் தமிழ்நாடு பெண்கள் வளா்ச்சிக்கழக கூடுதல் இயக்குநா், அனைத்து மாவட்டங்களில் உள்ள மகளிா் திட்டமேலாளா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூட்டமைப்பின் வருவாய் அடிப்படையில் அடிப்படை மதிப்பூதியம் ரூ. 1500 முதல் ரூ. 3500 வரை மட்டும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்களது ஊதியம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
ஆகவே, மகளிா் முன்னேற்ற வாரியத்தின் புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் ஏற்கனவே பெற்று வந்த ரூ. 5000 மதிப்பூதியத்தை ரூ. 15000 ஆக உயா்த்த வேண்டும். கணக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். 15 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களை கணக்காளராகவும் கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தர பணி வழங்கவும் வேண்டும்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகா் மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது தலைமையில் அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையம்- அம்பாசமுத்திரம் சாலையில் இயங்கி வந்த அரசு இந்திய தொழிலாளா் - வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பீடி தொழிலாளா்களுக்கான மருத்துவமனை (மருந்தகம்) பாளையங்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும். திருநெல்வேலி மாநகர பகுதியில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: 2023-24, 2024-25 ஆம் கல்வி ஆண்டுகளில் ஆா்.டி.இ. திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் நா்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயின்ற மாணவா்- மாணவிகளுக்கான கட்டணம் அரசிடம் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, உடனடியாக கட்டணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.