அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
கீழடி விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைக்க தயங்குவது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத்
கீழடியை ஏற்றுக்கொள்ள வலுவான ஆதாரங்கள் தேவை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், இன்னும் அதிகமான அறிவியல்பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகாரம் வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, வரலாறு, அது கூறும் உண்மையும் உங்களின் மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருந்தார்.
மேலும், தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஷெகாவத் மீண்டும் கீழடி தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
”நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.
அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.
தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.