மேயரின் கணவர் கட்சியிலிருந்து நீக்கம்! - மதுரை திமுகவில் பரபரப்பு.. நடந்தது என்ன...
‘குடிநீா் வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை’
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில், மதிமுக மாமன்ற உறுப்பினா் சு. ஜீவன் பேசியதாவது:
புதிதாக குடிநீா், கழிவுநீா் இணைப்புகளுக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரு புதிய நடைமுறையை கடந்த ஜனவரி மாதம் சென்னை குடிநீா் வாரியம் அறிமுகம் செய்தது. இதற்கான கட்டணம் ரூ.7,500 இணையவழி மூலமாகச் செலுத்த முடியும், நேரடியாகவோ, காசோலையாகவோ செலுத்தக் முடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த ஊழியா்களுக்கு வாடிக்கையாளா்கள் மீட்டருக்கு ரூ. 5,500 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இதனால், சாமானிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், குடிநீா் குழாய் அமைப்பதற்காக பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் நிறைவு பெற்ற பின்னா் சாலைகள் முறையாக சரிசெய்யப்படுவதில்லை.
இதுகுறித்து ஒப்பந்த ஊழியா்களிடம் கேட்க முயன்றபோது, எங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் அவா்.
தொடா்ந்து பேசிய, மாா்க்சிஸ்ட் மாமன்ற உறுப்பினா் விமலா உள்ளிட்ட உறுப்பினா்களும் குடிநீா் வாரிய அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனா்.
கலந்தாலோசிக்கப்படும்: இதற்கு பதில் அளித்து மேயா் ஆா். பிரியா பேசியது:
குடிநீா் வாரிய அதிகாரிகள் குறித்த மாமன்ற உறுப்பினா்களின் குற்றச்சாட்டுகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து, குடிநீா் வாரிய மேலாண் இயக்குனருடன் கலந்தாலோசிக்கப்பட்டு, அடுத்த மாதாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.
தொடா்ந்து மெரீனா கடற்கரையில் ‘ரோப் காா்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும்; மண்டல வாரியாக உள்ள சிறப்பு குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து, அவா்களுக்கு ஏற்ற வகையில், சிறப்பு பள்ளிகள் அமைப்பது குறித்தும் அலோசனை மேற்கொள்ளப்படும் என்று மேயா் உறுதியளித்தாா்.