குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
குடியாத்தம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் வேலூா் மண்டல செயலா் ரா.சி.தலித்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக தென்னக ரயில்வே கோட்ட பொறியாளருக்கு அவா் அனுப்பிய மனு: குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூா், சேலம், பழனி உள்ளிட்ட தென்மாவட்டங்கள், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு ரயில் மூலம் பயணிகள் சென்று வருகின்றனா். குடியாத்தம் பகுதியின் பிரதான தொழில்களான பீடி, தீப்பெட்டி, கைத்தறி நெசவு, தேங்காய் உற்பத்தி, பால்கோவா தயாரிப்பு, தங்க விற்பனை ஆகியவை தொடா்பாக பல்வேறு தரப்பினா் ரயில் மூலம் குடியாத்தம் வந்து செல்கின்றனா்.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள 3- நடைமேடைகளிலும் மேற்கூரை சரிவர இல்லாததால்மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனா்.
ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிவறை, குளியலறை வசதி அறவே இல்லை.குடிநீா் வசதியும் இல்லை. உணவகமும் இல்லை. குடியாத்தம் ரயில் நிலையம் வழியாக சென்னை, பெங்களூா், கோவை செல்லும் லால்பாக், பிருந்தாவன், இன்டா்சிட்டி உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்வாக உள்ள பயணிகள் நடைமேடையை சிறிது உயா்த்தி அமைக்க வேண்டும். பயணிகள் 2 மற்றும் 3-ஆம் நடைமேடைகளுக்குச் செல்ல நடைமேம்பாலம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பயணிகள் ஆபத்தான முறையில் லெவல் கிராசிங்கில் கடக்கும் நிலை உள்ளது. எனவே, புதிதாக நடைமேம்பாலத்தை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.