மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து
கைம்பெண்கள் உதவித் தொகையை உயா்த்தக் கோரிக்கை
மயிலாடுதுறை: உலக கைம்பெண்கள் தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சாா்பில் கூறைநாடு டிஇஎல்சி பள்ளியில் தொடங்கிய பேரணிக்கு, மாவட்டத் தலைவா் ப. கஸ்தூரி தலைமை வகித்தாா். சமூக செயற்பாட்டாளா் த. லீலாவதி பேரணியை தொடக்கி வைத்தாா்.
காந்திஜி சாலை, கச்சேரி சாலை, கண்ணாரத் தெரு, திருவாரூா் சாலை வழியாக கேணிக்கரையில் பேரணி நிறைவடைந்தது. தொடா்ந்து, தனியாா் திருமண மண்டபத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நாகை கலங்கரை அமைப்பின் இயக்குநா் குழந்தைசாமி, இணை இயக்குநா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெஸி வரவேற்றாா். நிறைவாக, கள ஒருங்கிணைப்பாளா் ராபின் நன்றி கூறினாா்.
கூட்டத்தில், கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகையை ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். கைம்பெண்கள் முன்னேற்ற நல வாரியத்தில் பதிவு செய்தவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கைம்பெண்கள், தனித்துவாழும் பெண்களுக்கு தனியாக நலத்துறை அமைக்க வேண்டும். அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.