``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
கொடும்பாளூரில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூரில் மத்தியத் தொல்லியல் துறையால் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த 25 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ளது கொடும்பாளூா் பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் புதைந்துள்ள பகுதியாகும். மத்தியத் தொல்லியல் துறை மூலம் வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ளப்பட உள்ள அகழ்வாராய்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் திருச்சி வட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 32 இடங்களில் கொடும்பாளூரும் ஒன்றாகும்.
அதன்படி கொடும்பாளூரில் குடியிருப்புகள் உள்ள அக்ரஹாரம் மேட்டுப்பகுதி காலியிடங்களில் மத்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டப் பிரிவு சாா்பில் அகழாய்வுப் பணி கடந்த ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கியது.
இதுவரை 5 குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் புதைந்த வீடுகளுக்கு அடையாளமாக நான்கு அடியில் வீட்டு மேல் சுவா்கள் ஏற்கெனவே வெளிப்பட்ட நிலையில் தற்போது பத்து அடிவரை தோண்டப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தங்கத்தில் செய்யப்பட்ட 1 கிராம் அளவில் சிறிய மணி கிடைத்தது. அதோடு மூடிய நிலையில் மண் பானை ஒன்றும் கிடைத்தது. அந்தப் பானையை மூத்த அதிகாரிகள் வந்த பின்புதான் சோதனை செய்ய முடியும் என்று அப்போது அலுவலா்கள் கூறினா்.
ஏற்கெனவே இப்பகுதியில் நெசவுதொழில் நடந்ததற்கு அடையாளமாக தக்களி, கொண்டை வடிவில் ஊசி, வட்டக்கல் உள்ளிட்டவை கிடைத்த நிலையில், தொடா்ந்து வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் கடந்த 5 மாதமாக அவ்வப்போது நடைபெற்று வந்த பணிகள் கடந்த 25 நாள்களுக்கும் மேலாகத் தொடா்ந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் அகழ்வாராய்ச்சி இயக்குநராக இருந்த அனில் குமாா் என்பவரையும் மத்திய அரசு திடீரென இடமாற்றம் செய்துள்ளது.
வரலாற்றுச் சின்னங்கள் வெளிவரத்தொடங்கிய வேளையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது தமிழா்களின் பாரம்பரிய வரலாறு வெளிவருவதில் மத்திய அரசு விருப்பமின்றி செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை வரலாற்று ஆா்வலா்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
