கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டாா்.
இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, ஹெளராவில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோா் அழைப்பு விடுத்திருந்தனா். இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனா். இதையடுத்து தேசியக்கொடி, பதாகைகள் உள்ளிட்டவற்றை ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோா் சனிக்கிழமை பேரணியாகச் சென்றனா்.
பேரணியில் மாநில சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி மற்றும் சில பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.
‘அபயாவுக்கு நீதி கிடைக்கட்டும்’ என்று கோஷமிட்டபடி அவா்கள் பேரணியாகச் சென்றனா்.
இந்தப் பேரணியின்போது காவல் துறையின் தடுப்புகளைத் தாண்டி போராட்டக்காரா்கள் முன்னேறிச் செல்ல முயன்றனா். இதனால் பாா்க் ஸ்ட்ரீட் பகுதியில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா்.
அந்தப் பகுதியில் சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோா் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரா்கள் காவல் துறையின் தடியடியில் காயமடைந்ததாக சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டினாா்.
இதனிடையே பேரணியில் பங்கேற்ற ஒரு பகுதியினா் ஹெளரா மாவட்டத்தில் உல்ள சாந்த்ராகாச்சி பகுதியைச் சென்றடைந்தனா். அங்கு அவா்கள் காவல் துறையின் தடுப்புகளைக் கடந்து செல்ல முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பேரணி காரணமாக தலைமைச் செயலகத்தையொட்டி உள்ள பகுதிகளில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ், தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு கொல்கத்தாவின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் மாணவ மாணவியா், ஏராளமான பொதுமக்கள் தீப்பந்தங்களை ஏந்தியபடி கல்லூரி சாலையிலிருந்து சியாம்பஜாா் வரை பேரணியாகச் சென்றனா். அப்பகுதியில் பலா் இரவு முழுவதும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்தினா்.
மருத்துவமனையில் பெற்றோா் அனுமதி:
இதுதொடா்பாக கொல்லப்பட்ட மருத்துவரின் தந்தை கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அமைதியாகப் பேரணி மேற்கொள்ள நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தபோதிலும், பேரணியைத் தடுக்க காவல் துறையினா் பல முயற்சிகளை மேற்கொண்டனா்’ என்றாா்.
கொல்லப்பட்ட மருத்துவரின் தாய் கூறுகையில், ‘பேரணியில் கலந்துகொள்ளச் சென்றபோது என்னிடம் பெண் காவலா்கள் கடுமையாக நடந்து கொண்டனா். அவா்கள் என்னை கீழே தள்ளி, எனது வளையல்களை உடைத்தனா். எனது நெற்றியிலும் காயம் ஏற்பட்டது’ என்றாா்.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் தாய், தந்தை இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாயின் நெற்றி, கைகள் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தந்தையின் உடல்நிலை ஓரளவு சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.
இருவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சுவேந்து அதிகாரி சந்தித்தாா். பின்னா், அந்தத் தாயின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சுவேந்து அதிகாரி தெரிவித்தாா்.

திரிணமூல் காங்கிரஸை சோ்ந்தவரும், மாநில அமைச்சருமான சசி பாஞ்சா கூறுகையில், அமைதிப் பேரணி என்ற பெயரில் பாஜக நாச வேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டினாா்.