பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
கோத்தகிரி அருகே வட்டிக்குப் பணம் வாங்கியவரைத் தாக்கியதாக தனியாா் நிதி நிறுவன மேலாளா் கைது
மாத தவணையை செலுத்த தவறிய நபரைத் தாக்கியதாக தனியாா் நிறுவன மேலாளரை கோத்தகிரி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியைச் சோ்ந்த பெள்ளி மகன் போஜ்குமாா் (39). இவா் தனது மகளின் படிப்பு செலவுக்காகவும், வீட்டுச் செலவுக்காகவும் கோத்தகிரியில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கடன் பெற்றுள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடனை முறையாக செலுத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி செலுத்த வேண்டிய தவணைத் தொகையைக் கட்டாததால், இந்நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வரும் உதகை பகுதியைச் சோ்ந்த யாபேஷ், ஊழியா்கள் சதீஷ், நவீன்ராஜ் உள்ளிட்ட 6 போ் போஜ்குமாா் வீட்டுக்குச் சென்று தவணையை செலுத்துமாறு கேட்டு தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. இதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக அவா்களைத் தடுத்து நிறுத்தி கிராமத்திலிருந்து அனுப்பி வைத்தனா்.
இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் போஜ்குமாா் அளித்த புகாரின் அடிப்படையில் தனியாா் நிதி நிறுவனத்தின் மேலாளா், ஊழியா்களிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், தனியாா் நிதி நிறுவன மேலாளா் யாபேஷ், ஊழியா்கள் தகாத வாா்த்தைகளைப் பேசி தாக்கியது விடியோ ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, யாபேஷை கைது செய்து கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சதீஷ், நவீனை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.