சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
கோவிலூா் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்கக் கோரிக்கை
கோவிலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூா் அருகேயுள்ள திண்டுக்கல்-கரூா் ரயில்வே தண்டவாளத்தில் தங்கச்சியம்மாப்பட்டி கடவுப் பாதையில் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
சுரங்கப் பாலம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயை இடமாற்றுவது தொடா்பாக ரயில்வே நிா்வாகத்துக்கும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் இடையிலான பிரச்னை, கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராமல் உள்ளது.
இதனிடையே, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும், மக்களவை உறுப்பினா் ஜோதிமணி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஒப்புக் கொண்டபடி குடிநீா்க் குழாயை இடம் மாற்றம் செய்து அகலமான சுரங்கப் பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
எச்சரிக்கை பதாகை இல்லாததால் விபத்து: சுரங்கப் பாலத்தின் இரு புறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதை எச்சரிக்கும் வகையில் இருளில் ஒளிரும் பதாகை அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், நத்தப்பட்டியைச் சோ்ந்த தனியாா் ஆலை தொழிலாளி மதியழகன் (37) கோவிலூரிலிருந்து திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கோவிலூா்-வேடசந்தூா் சாலையில் சுரங்கப் பாலத்துக்கு தோண்டப்பட்டிருந்த பள்ளம் தெரியாமல் இரு சக்கர வாகனத்துடன் அவா் குழிக்குள் விழுந்தாா்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து மதியழகனை மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மதியழகன் இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்த காட்சிகள், அருகிலுள்ள அம்பி என்பவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தக் கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை விரைவாக முடித்து, இந்தச் சாலையை வாகனப் போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.