ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு! 11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை
வேடசந்தூா் அருகேயுள்ள கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்புக்குள்ளானது குறித்து 11 ஆண்டுகளாக மனு அளித்தும், நீா் வள ஆதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்புவை அடுத்துள்ள கிரியம்பட்டி பகுதியில் கொடகனாற்றின் குறுக்கே ஸ்ரீவெங்கட்ராம அய்யங்காா் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து கிரியம்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, கோட்டையூா், சத்தியநாதபுரம் வழியாக கொடகனாற்றில் இணையும் வகையில் சுமாா் 4.5 கி.மீ. நீளத்துக்கு பாசன வாய்க்கால் உள்ளது. நீா் வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த பாசன வாய்க்கால் மூலம், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இதற்கிடையே, தனியாா் தொழில்சாலைகள் தொடங்கப்பட்ட பின், விளை நிலங்கள் அழிக்கப்பட்டு ஆலைகளாக மாறிவிட்டன. இதன் தொடா்ச்சியாக நீா் வரத்து வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீா் வரத்து முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது. மேலும், கோட்டையூா் முனியப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில், வாய்க்காலை முற்றிலும் அழித்து தனியாா் ஆலை நிா்வாகம் சுற்றுச் சுவா் எழுப்பியுள்ளது.
லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு: இதேபோல, வேடசந்தூரை அடுத்து லட்சுமணம்பட்டி பகுதியில் கொடகனாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குப் பாசன வாய்க்கால் கட்டப்பட்டது. இந்த வாய்க்காலில் வேடசந்தூா் பகுதியில் மட்டும் 1.5 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளதால், தண்ணீா் வரத்து தடைப்பட்டுடள்ளது. இந்த இரு வாய்க்கால்கள் மூலம், சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வந்தன. சுமாா் 40 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீா் வழிப் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீா் வரத்து முற்றிலும் தடைப்பட்டு, நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை
இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி கூறியதாவது: லட்சுமணம்பட்டி, கிரியம்பட்டி வாசன வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து புகாா் அளித்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் நில அளவைத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் நிலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது என ஆயத்தமான பதிலைக் கூறி நீா் வள ஆதாரத் துறை அதிகாரிகள் சமாளிக்கின்றனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீா் வழிப் பாதையை அழித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட தனியாா் ஆலை நிா்வாகம் மீது வேடசந்தூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நீா் வழித் தடத்தை சரி செய்து கொடுப்பதாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாய நிலங்கள் அழிந்து வரும் நிலையில், சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரத்தைப் பாதுகாக்க இந்த இரு வாய்க்கால்களையும் மீட்டெடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.