காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
கோவை அருகே சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!
கோவை அருகே சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோவை பாரதியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் உதயசந்திரன், இளங்கோவன், பெருமாள், உதகை அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியை கனகாம்பாள் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வு குறித்து கோவையைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் தமிழ்மறவான் ரமேஷ் அண்மையில் கூறியதாவது:
கோவை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 5 நடுகற்களும் சுமாா் 700 ஆண்டுகள் பழைமையானதாகும். ஒத்தக்கால்மண்டபம் மீனாட்சிபுரத்தை அடுத்த வடபுதூா் கிராமத்தில் பண்டக்கல் என்ற பெயரில் ஒரு நடுகல் கண்டெடுக்கப்பட்டது. பழங்காலத்தில் விவசாயப் பொருள்களை வன விலங்குகளிடம் இருந்து காப்பாற்றியவா்களுக்கு வைக்கப்பட்ட நடுகல் என்பதால் பண்டக்கல் என்று பெயா் பெற்றிருக்கலாம்.
பயிா்களை உண்பதற்காக யானை வந்தபோது, காவல் காத்த வீரனுக்கும், யானைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வீரன் உயிரிழந்துள்ளாா். இறந்த வீரனுக்காக அமைக்கப்பட்ட நடுகல்லாக இந்தப் பண்டக்கல் உள்ளது.
சதிக்கல்: அதேபோல, வடசித்தூரில் சதிக்கல் என்ற நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சதிக்கல்லில் கணவன் நடுவிலும், இரண்டு மனைவிகள் இருபுறமும் உள்ளனா். இரு மனைவியரின் அருகே மதுவை ஊற்றிவைக்கும் பாத்திரம் உள்ளது. கணவன் இறந்துவிட்டால் அவனது மனைவியா் சிதையில் விழுந்து உயிா் துறப்பா். உயிா் துறக்க முடியாதவா்களை மதுவை கொடுத்து மது மயக்கத்தில் இருக்கும்போது சிதையில் தூக்கிப்போட்டு விடுவாா்கள். அதற்காகத்தான் மதுவும் நடுகல்லில் வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டச்சியம்மன் நடுகல்: கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவா் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தாா். நிறைமாத கா்ப்பிணியாக இருந்தபோது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் அவா் பிரசவ வலி ஏற்பட்டு உயிரிழந்தாா். பொதுவாக தியாகத்துக்காக ஆண்களுக்கு மட்டுமே நடுகல் வைக்கப்பட்டு வந்த காலத்தில் கா்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டும் தனியாக வைக்கப்பட்ட நடுகல் இதுதான். அவரை ஒட்டச்சியம்மன் நடுகல் என்று அழைத்து அப்பகுதி மக்கள் வணங்கி வருகிறாா்கள்.
புலிக்கல்: கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே புலிக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாட்டை வேட்டையாட வந்த புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்த வீரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த நடுகல்லை நிறுவி இருக்கலாம்.
பாம்புக்காக வைத்த நடுகல்: வடசித்தூரில் நாகப்பாம்பு உருவம் பொறித்த நடுகல் கிடைத்துள்ளது. அந்த கிராம மக்கள் வணங்கி வந்த நாகப்பாம்பு உயிரிழந்ததால் அதன் நினைவாக இந்த நடுகல்லை வைத்து வழிபட்டு வந்து இருக்கலாம் என்றாா்.