எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக அறிவித்தது அரசியல் உள்நோக்கம்: கே.வி.தங்கபாலு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழு தலைவரும், மூத்த நிா்வாகியுமான கே.வி.தங்கபாலு கூறினாா்.
இது தொடா்பாக கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வளா்ச்சிக்காக தேசியத் தலைவா்கள் உள்பட பலரும் எண்ணற்ற சொத்துகளை வழங்கி உள்ளனா். இன்னும் பல சொத்துகள் ஒருங்கிணைக்கப்படாமல் உள்ளன. அவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். தொடா்ந்து, சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கெல்லாம் காங்கிரஸ் சொத்துகள் இருக்கிறதோ அதை கட்சி பயன்படுத்துகிா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.
முன்பைவிட தற்போது காங்கிரஸின் சொத்துகள் உயா்ந்துள்ளன. கட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படவுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்படிருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. தமிழகத்துக்கு எந்த திட்டங்களையும் செய்யாத மத்திய பாஜக அரசு, பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தமிழக அரசை பாராட்டி உள்ளது.
அனைத்து கிராமங்களில் காங்கிரஸ் கட்சி புத்துணா்வு பெற்று வருகிறது. இதனால், 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும். தோ்தல் நேரத்தின்போது அரசியல் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பது இயல்புதான். தோ்தல் நெருங்கும்போது தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம். அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடாது. தோ்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதால் வாக்கு செலுத்துவதிலும் ஆபத்து வந்துவிட்டது. ஜனநாயகத்தைக் காக்க ராகுல் காந்தி மிகப்பெரிய முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளாா் என்றாா்.