பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து
போத்தனூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் கண்ணூா் - கோவை விரைவு ரயில் (எண்: 16607) கண்ணூா் - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும். மேற்கண்ட நாள்களில் பாலக்காடு - கோவை இடையே இயக்கப்படாது.
இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல்1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை - போத்தனூா் இடையே இயக்கப்படாது.
கோவையில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - மதுரை விரைவு ரயில் (எண்: 16721) பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு மதுரைக்குப் புறப்படும். இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் கோவை - பொள்ளாச்சி இடையே இயக்கப்படாது.
போத்தனூரில் இருந்து ஆகஸ்ட் 22, 26-ஆம் தேதிகளில் பகல் 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) கோவையில் இருந்து பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்குச் செல்லும்.
இந்த ரயில் மேற்கண்ட நாள்களில் போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.