தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சிதம்பரம் குருநமச்சிவாயா் மடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள குருநமச்சிவாயா் மடத்தின் வளாகத்தில் உள்ள 9 ஆக்கிரமிப்பு வீடுகளை இந்து அறநிலையத் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
குருநமச்சிவாயா் மடத்துக்குச் சொந்தமான இடத்தில் விநாயகா், ஆத்மநாதா், யோகாம்பாள், குருநமச்சிவாயா், மாணிக்கவாசகா் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு திருப்பாற்கடல் தீா்த்தக் குளமும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. இந்த இடம் சமயக் குரவா்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப் பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும்.
வழிபாட்டுக்கு இடையூறாக கோயில் வளாகத்தின் அருகில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை காலி செய்து ‘சீல்’ வைத்து அறநிலையத் துறையினா் ஒப்படைக்குமாறு பக்தா் வாஞ்சிநாதன் என்பவா் தொடுத்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையினா், போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கு ‘சீல்’ வைத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து 9 போ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனா். மீதமுள்ள 13 வீடுகளை ஏற்கெனவே பிறப்பித்த நீதிமன்ற உத்தரவின் படி, வீடுகளை காலி செய்து ‘சீல்’ வைக்க வேண்டும் என்று அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி இந்து சமய அறநிலைத் துறையினா் குரு நமச்சிவாய மடம் மற்றும் திருப்பாற்கடல் மடத்தைச் சுற்றியுள்ள 13 வீடுகளுக்கு ‘சீல்’ வைத்து, வீட்டின் கதவுகளில் நோட்டீஸ் ஓட்டினா்.
பின்னா், 2021-ஆம் ஆண்டு அக்.31-ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 13 வீடுகளும் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் மீதமுள்ள 9 விடுகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில், கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன் தலைமையில் தனி வட்டாட்சியா் ஆனந்தன், செயல் அலுவலா்கள் ராஜா சரவணக்குமாா் உள்ளிட்டோா் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் 9 வீடுகளை செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றினா்.