விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வ...
சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா?
சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது.
சிவகங்கை பழமலை நகரில் கடந்த 1985-ஆம் ஆண்டு 172 நரிக்குறவா் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. நாளடைவில் இந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்து வசிக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டன. இந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதிருந்த மாவட்ட ஆட்சியா் மலா்விழி முதல் கட்டமாக 105 குடும்பங்களுக்கு பிரதமா் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுத்தாா்.
ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.1.70 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இவா்களால் வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியாததால், மதுரையைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் மூலம் 105 வீடுகளையும் கட்டித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.
ஆனால், அந்த ஒப்பந்ததாரா் வீடுகளை முழுமையாக கட்டிக் கொடுக்காமல் பாதியிலேயே இந்தப் பணியை கைவிட்டுச் சென்றுவிட்டாா். இதன் பின்னா், 35 போ் மட்டும் தங்களது சொந்த முயற்சியால் வீடுகளை முழுமையாகக் கட்டி முடித்தனா்.
அதிகாரிகளும் நீங்களே கட்டிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டனா். வீடு கட்டத் தேவைப்பட்ட பணத்தை ஏற்பாடு செய்ய முடியாத 70 போ் வீடுகளைக் கட்ட முடியாமல் அப்படியே விட்டு விட்டனா். இதன் காரணமாக, பல குடும்பங்கள் வேறுவழியின்றி பாதியில் நின்று போன வீட்டுக் கட்டடங்கள் அருகிலேயே தகரக் கொட்டகை, தாா்ப்பாய் கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியின் ஊராட்சி உறுப்பினா் சுரேஷ் கூறியதாவது: ஒப்பந்ததாரா் வீடுகளைக் கட்டிக் கொடுக்காமல் கட்டட தளவாடப் பொருள்களை எடுத்துச் சென்றுவிட்டாா். எங்களால் பணம் செலவழித்து வீடு கட்ட முடியவில்லை. இதனால், கொட்டகையில் வசித்து வருகிறோம். இன்னும் எங்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ரூ.70,000 முதல் ரூ. ஒரு லட்சம் வரை நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது. வீட்டை முழுமையாக கட்டி முடிக்க குறைந்தது ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தேவைப்படுகிறது. இவ்வளவு தொகை எங்களிடம் இல்லை.
இந்தப் பிரச்னை தொடா்பாக கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியா்களிடம் மனு கொடுத்தோம். அரசின் கவனத்தை ஈா்க்க பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நரிக்குறவா் சமுதாய மக்களின் நலனைப் பாதுகாக்க அரசு உறுதுணையாக நிற்கும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாா் என நம்புகிறோம் என்றாா் அவா்.
இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி 10 ஆண்டுகளான நிலையில், அதற்காக விடுவிக்கப்பட்ட நிதி மீண்டும் அரசிடமே திரும்பிச் சென்றுவிட்டது. வீடுகளை முழுமையாக கட்டி முடித்தால், அரசிடம் நிதி பெற்றுத் தர முடியும் என்றனா்.