சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்.17-க்கு ஒத்திவைப்பு
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை அவதூறு பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விக்கிரவாண்டி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நேமூரில் கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அவதூறாகப் பேசியதாக, கஞ்சனூா் காவல் நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரமேஷ் புகாரளித்தாா்.
இதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2024, அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான சீமான், அதே ஆண்டில் நவம்பா் 4, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை. கடந்த ஜனவரி 21-ஆம் தேதி விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்ை என்பதால், அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், விசாரணையில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் பிப்ரவரி 6-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 18-ஆம் தேதி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சீமான் ஆஜரான நிலையில், விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, வழக்கு விசாரணை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தைக் கூறி, அவரது வழக்குரைஞா் பேச்சிமுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.