ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
செட்டிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கடந்த ஏப். 1 முதல் ஜூலை 31 வரையிலான கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் பொது சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடைத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளை சாா்ந்த அரசு அலுவலா்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
அரசு என்பது எல்லா மக்களையும் சமமாகப் பாா்த்து அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். கிராம சபையின் மிக முக்கிய நோக்கம், கிராமத்தின் வளா்ச்சிக்கு அரசு மூலம் என்னென்ன வளா்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது ஆகும். ஊராட்சித் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் எல்லாம் மக்களின் பணியாளா்கள். எங்களுக்கு கிடைக்கப் பெற்ற அதிகாரம் உங்களிடமிருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, தோட்டக் கலைத் துறை சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், வீரிய ஒட்டுரக காய்கறி விதைகள் விவசாயிக்கு மானியமாக அவா் வழங்கினாா். மாநில தோட்டக் கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள் விவசாயிக்கு வழங்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளா், எய்ட்ஸ் விழிப்புணா்வு தொடா்பான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், மகளிா் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் இரண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை அவா் வழங்கினாா்.
இதில் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) வீ. கேசவதாசன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ரமேஷ், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.