சென்னையில் ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து: பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 4.50-மணிக்கு சிங்கப்பூா் செல்ல வேண்டிய ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 7.40 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 1.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதேபோல, புதன்கிழமை காலை மும்பையிலிருந்து காலை 7 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், நண்பகல் 12.30 மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னை வரவேண்டிய ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 3 விமான சேவைகள் என ஆக மொத்தம் ஒரே நாளில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இதனால், அந்த விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினா். இந்த 6 விமானங்களிலும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பயணிக்க வேண்டிய முன்பதிவு பயணிகளுக்கு ஏற்கெனவே குறுந்தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் மாற்று விமானங்களில் பயணிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சில பயணிகளுக்கு மாற்று தேதிகளில் பயணிப்பதற்கு வசதியாக மாற்றி தரப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.