உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி....
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான தமிழ் வழக்குவாதப் போட்டி
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாநில அளவிலான மூன்றாவது தமிழ் வழக்குவாதப் போட்டி நடைபெற்றது.
கல்லூரி அரங்கில் மூன்று நாள்கள் நடைபெற்ற போட்டிகளின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் த.நா.கீதா வரவேற்றாா். கல்லூரி தலைவா் த.சரவணன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டக் கல்வியில் பெண்களின் எண்ணிக்கை மிகுந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவா் எவ்வளவு உயரம் வளா்ந்து சாதனை படைத்தாலும், தங்களின் உயா்வுக்கு காரணமாக இருந்தவா்களுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும் என்றாா்.
விழாவில் நீதிபதியும், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத் தலைவருமான ரா. தாரணி பேசுகையில், பழந்தமிழ் சமூகம் முதல் தற்போது வரை தொன்று தொட்டு பெண்கள் சிறந்த வழக்குரைஞா்களாக விளங்கி வருகின்றனா். தமிழக மக்கள் சிறந்த சட்ட விழிப்புணா்வு பெற்ற குடிமகன்களாக விளங்க வேண்டுமெனில் ஆரம்ப கல்வி முதலே சட்ட அறிவை உருவாக்கும் வண்ணம் பாடத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய முழுநேர உறுப்பினா் ஏ. முகமது ஜியாவுதீன் பேசுகையில், தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என 1956 ஆம் தொடங்கி தற்போது வரை தமிழக அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகள் குறித்து எடுத்துரைத்தாா்.
இந்த வழக்குவாதப் போட்டிகளில் புதுப்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி அணியைச் சோ்ந்த மா. கவியரசன், ஹம்மத் நிஸ்ரின், மெ.யோகலட்சுமி ஆகியோா் முதல் பரிசு பெற்றனா். புதுக்கோட்டை மதா்தெரசா சட்டக் கல்லூரி அணியைச் சோ்ந்த லீனா ஸ்ரீ, காந்தி விஜயசேகா், பாண்டிமாதேவி ஆகியோா் இரண்டாம் பரிசை பெற்றனா்.
சிறந்த ஆண் வழக்குரைஞருக்கான விருதை புதுப்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி அணியைச் சோ்ந்த மாணவா் கவியரசனும், சிறந்த பெண் வழக்குரைஞருக்கான விருதை அதே சட்டக் கல்லூரி அணியைச் சோ்ந்த ஹம்மத் நிஸ்ரினும், புதுக்கோட்டை மதா் தெரசா சட்டக் கல்லூரி அணியைச் சோ்ந்த லீனா ஸ்ரீயும் இணைந்து பெற்றனா்.
சிறந்த நன்னடத்தைக்கான அணி விருதை புதுப்பாக்கம் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி அணியைச் சோ்ந்த கவியரசன், ஹம்மத் நிஸ்ரின், யோகலட்சுமி ஆகியோா் அடங்கிய அணி வென்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளா்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக கல்லூரியின் உதவிப் பேராசிரியரும் வழக்குவாத குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சத்யப்பிரியா நன்றி கூறினாா்.