கோட்டை மாரியம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்: இன்று மின் விநியோகம் நிறுத்தம்
“சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைப்போம்!” -ஆப்கன் அகதிகள் வெளியேற இன்றே கடைசி நாள்
ஈரானிலிருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான காலக்கெடுவும் இன்றுடன்(ஜூலை 6) முடிவடைவதால் இருநாட்டு எல்லையில் ஆப்கன் மக்கள் பெருந்திரளாக குழுமியுள்ளனர்.
ஈரானிலிருந்து வரும் மக்களை ஆப்கானிஸ்தானுக்குள் அனுமதிக்க தேவையான நடைமுறைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் இருநாட்டுக்கிடையிலான ‘இஸ்லாம் ஃகாலா’ எல்லையில் கடும் கூட்டம் காணப்படுகிறது.
இதனால் ஆப்கன் எல்லையில் ‘அவசரநிலை’ ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் ஈரான் அரசு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கன் அகதிகள் ஈரானிலிருந்து வெளியேறி வருகின்றனர். சுமார் 60 லட்சம் ஆப்கன் மக்கள் ஈரானில் தஞ்சமடைந்திருக்கும் நிலையில், புதிய உத்தரவால் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்.
ஜூன் மாதம் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் ஈரானிலிருந்து திரும்பியிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் மக்கள் குடியேற்றம் அதிகரிப்பதால் அங்கு அவசரநிலை நிலவுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. இந்த ஓராண்டில் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து 14 லட்சம் ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் 25 சதவீதத்தினர் குழந்தைகள்.
ஈரானில் இருக்கும் ஆப்கன் அகதிகள் வெளியேற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரிகளின் கடும் அழுத்தத்தாலும் கைது நடவடிக்கைகளுக்கு பயந்தும் வேறு வழியின்றி தாயகம் திரும்புவதாக ஆப்கன் அகதிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, ஈரானிலிருந்து எல்லை சென்றடைந்த ஒரு அகதி பேசியதாவது: “ஈரானில் கடும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைவிட எமது சொந்த நாட்டில் பிச்சையெடுத்து பிழைக்க தயாராக இருக்கிறோம்” என்கிறார்.
வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு, வெளிநாடுகளின் அகதிகள் வெளியேற்ற நடவடிக்கை பெரும் சுமையாக அமைந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, ஆப்கன் அகதிகளை வெளியேற்றுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பல நாடுகளையும் ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
Afghan refugees arrive from Iran at Islam Qala border between Afghanistan and Iran