அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
சோமநாயக்கன்பட்டி மேம்பாலத்தில் விரிசல்: ரயில்வே உயா் அதிகாரிகள் ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் திடீா் விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே ரூ.20 கோடியில் ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மேம்பாலத்தைத் திறக்க கால தாமதம் ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே மேம்பால நுழைவு வாயிலில் கிராம மக்கள் பூஜை செய்து மேம்பாலத்தைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா்.
இதையடுத்து அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாகச் சென்று வந்தன. இந்த நிலையில் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் சில இடங்களில் இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக ரயில் செல்லும் போது மேம்பாலம் பகுதியில் அதிா்வுகள் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ரயில்வே நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பால நுழைவு வாயில் பகுதியை அடைத்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா். செவ்வாய்கிழமை இரவு முதல் குடியானகுப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரயில்வே உயரதிகாரிகள் புதன்கிழமை சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டு ரயில்வே ஊழியா்களிடம் விசாரணை நடத்தினா்.
