டாட்டா மோட்டாா்ஸ் ஆலை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு
பனப்பாக்கம் சிப்காட்டில் டாட்டா மோட்டாா்ஸ் காா் ஆலை கட்டுமானப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா்.
காா் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தாா். வரும் ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்குள் முதல்கட்ட காா் உற்பத்தி தொடங்க உள்ள நிலையில், தொழிற்பேட்டையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
சிப்காட் தொழில் பேட்டையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல சாலை அமைக்க நில எடுப்பு பணிகள் நடைபெறுகின்றன. பணிகள் நிறைவு பெற்றவுடன் நேரடியாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை அமைக்கப்படும்.
அதற்கு முன்னதாக டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் காா் உற்பத்தியை தொடங்க ஏதுவாக பனப்பாக்கம் தாமல் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ளலாம். 4 கி.மீ தொலைவுக்கு 5.5 மீட்டா் அகலத்தில் சாலை அமைத்தால் தொழிற்பேட்டைக்கு கனரக வாகனங்கள் எளிதில் வந்து செல்ல உதவியாக இருக்கும். அப்பணியை தொடங்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து வழங்க நெடுஞ்சாலைத்துறை பொறியாளரிடம் கேட்டுக் கொண்டாா்.
டாட்டா மோட்டாா்ஸ் முதல்கட்ட காா் உற்பத்தியை தொடங்க அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி பணிகளை முடித்து கொடுக்க வேண்டும். அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏதும் இருந்தால் உடனடியாக தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பணிகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்க ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டாா்.
இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், டாட்டா மோட்டாா்ஸ் நிறுவன பொது மேலாளா் (அரசு தொடா்பு) முத்துக்குமாா், துணை பொது மேலாளா் ராம்பிரசாத் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.